ஒடிசா ரயில் விபத்தில் இதுவரை 207 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தலைமைச் செயலாளர் பி.கே. ஜேனா தகவல் தெரிவித்துள்ளார்.

ஒடிசாவின் பாலசோர் அருகே சரக்கு ரயில் மீது 2 பயணிகள் ரயில்கள் மோதி கோர விபத்து ஏற்பட்டது.
சரக்கு ரயில் மீது பெங்களூரு – ஹவுரா விரைவு ரயில் மற்றும் ஷாலிமார் – சென்னை கோரமண்டல் விரைவு ரயில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் அதிவிரைவு ரயில் பாஹாநாகா பஜார் ரயில்நிலையம் அருகே  ஹவுரா ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. 15க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் கவிழ்ந்து கோர விபத்து ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், மத்திய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர், போலீசார் மற்றும் அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில் ஒடிஷா ரயில் விபத்து நடந்த இடத்தில் இருந்து 120க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளது என ஒடிஷா தீயணைப்பு துறை தகவல் தெரிவித்தது. மேலும் ரயில் விபத்தில் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 800 ஆக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டது. விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்க்க 200-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட்டுள்ளது என ஒடிசா தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.. மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருவதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என தீயணைப்புத் துறை தலைவர் சுதான் ஷூ சாரங்கி தகவல் தெரிவித்தார். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் இரவிலும் தொடர்வதாக ஒடிசா தீயணைப்பு துறை தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஒடிசா ரயில் விபத்தில் இதுவரை 207 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தலைமைச் செயலாளர் பி.கே. ஜேனா தகவல் தெரிவித்துள்ளார். மேலும் ரயில் விபத்தில் காயமடைந்தோரின் எண்ணிக்கை 900ஐ  தாண்டி இருப்பதாகவும்  அவர் தெரிவித்துள்ளார்..  தமிழகத்தில் இருந்து அமைச்சர்கள் உதயநிதி, சிவசங்கர் மற்றும் அதிகாரிகள், ஒடிஷாவிற்கு சென்று மீட்பு  பணியை துரிதப்படுத்த உள்ளனர்..

இதனிடையே ரயில் விபத்துக்கான மூல காரணத்தை கண்டறிவது மிகவும் முக்கியமானது என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்  தெரிவித்துள்ளார். ரயில்விபத்து  எப்படி நிகழ்ந்தது என்பதை கண்டறிய உயர்மட்ட குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.. தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது..

விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் :

ஒடிசாவில் நடந்த இந்த துரதிர்ஷ்டவசமான ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு கருணை இழப்பீடு வழங்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இறந்தால் ₹10 லட்சம். கடுமையான காயங்களுக்கு ₹2 லட்சமும், சிறு காயங்களுக்கு ₹50,000ம் என தெரிவித்துள்ளார்.

அதேபோல ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்க  உத்தரவிட்டுள்ளார்.