மத்தியப் பிரதேச மாநிலம் சத்னாவில், திருமண வரனைத் தாய் மறுத்த ஆத்திரத்தில் 11 வயது சிறுவன் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐந்தாம் வகுப்பு படித்து வந்த சிவராஜ் என்ற அந்தச் சிறுவன், திங்கட்கிழமை காலை வீட்டில் தனியாக இருந்தபோது, 45 வயதான மதுரா ரஜக் என்பவர் வீட்டிற்குள் புகுந்து சிறுவனின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார்.
பின்னர் சிறுவனின் உடலை ஒரு பிளாஸ்டிக் டிரம்முக்குள் மறைத்து வைத்துவிட்டு, வீட்டைப் பூட்டிவிட்டுத் தப்பி ஓடினார். மதியம் சிறுவனின் சகோதரி வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீடு பூட்டப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்து ஜன்னல் வழியாகப் பார்த்தபோதுதான் இந்தத் துயரம் வெளிச்சத்திற்கு வந்தது.
கொலையாளி மதுரா ரஜக், சிறுவனின் தாயை நீண்ட நாட்களாகத் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி வந்ததும், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தத் திருமண மறுப்பால் ஆத்திரமடைந்த மதுரா ரஜக், உனது மகன் இதற்குப் பலி கொடுக்கப்படுவான் என ஏற்கனவே மிரட்டியுள்ளார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தலைமறைவான மதுராவை போலீசார் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை அவர் கைது செய்யப்பட்டார். தாயின் உறுதியான முடிவிற்கு ஒரு அப்பாவி சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
