ஈரோடு மாவட்டத்தில் உள்ள ரங்கநாதபுரத்தில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பழனிச்சாமி நடந்து சென்ற போது அந்த பகுதியில் இருக்கும் 60 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்தார். அந்த கிணற்றில் 20 அடிக்கு தண்ணீர் இருந்ததால் காப்பாற்றுங்கள் என பழனிச்சாமி சத்தம் போட்டுள்ளார். அந்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் யாரும் உதவிக்கு செல்லவில்லை. இதனால் 2 நாட்களாக பழனிச்சாமி பாறை இடுக்கை பிடித்தபடி உணவு, தண்ணீர் இன்றி தவித்து வந்துள்ளார்.

நேற்று ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் பழனிச்சாமியின் சத்தம் கேட்டு கிணற்றுக்குள் எட்டி பார்த்தனர். அப்போது தான் அவர் கிணற்றுக்குள் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பழனிச்சாமியை உயிருடன் மீட்டனர். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த பழனிச்சாமிக்கு கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.