ஈரோடு மாவட்டத்திலுள்ள பண்ணாரியில் வனத்துறை, போலீஸ் துறை மற்றும் வருவாய் துறை சார்பில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. இங்குவரும் வாகனங்களை வனத்துறையினர் சோதனை செய்தும், நுழைவு கட்டணம் வசூலித்தும் அனுப்புகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பண்ணாரி சோதனை சாவடி வழியாக கர்நாடக மாநிலத்திலிருந்து சரக்கு வேன் வந்தது. அப்போது பணியில் இருந்த வனவர் தீபக்குமார், வேட்டை தடுப்பு காவலர் மூர்த்தி ஆகியோர் சரக்கு வேனை தடுத்து நிறுத்தி டிரைவரிடம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.

இதனால் ஏற்பட்ட தகராறில் வனத்துறை ஊழியர்கள் சரக்கு வேன் டிரைவரை தாக்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலானது. இது தொடர்பாக உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வனவர் தீபக் குமார், வேட்டை தடுப்பு காவலர் மூர்த்தி ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தனர்.