கேரளா மாநிலத்தில் உள்ள பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த 10 வயது சிறுமி தனது தந்தை மற்றும் உறவினர்களுடன் கடந்த ஆண்டு மே மாதம் ரயிலில் எஸ்வந்த்பூருக்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ஈரோடு ரயில் நிலையத்தை கடந்து சேலம் நோக்கி சென்ற போது ஓடும் ரயிலில் ஒருவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த கோவையைச் சேர்ந்த கமலநாதன் என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

கமலநாதன் முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுத்துக்கொண்டு முன்பதிவு பெட்டியில் பயணம் செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பான வழக்கு ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி கமலநாதனுக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிபதி அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.