சென்னை ஆவடி அருகே முத்தா புதுப்பேட்டை பகுதியில் சிவம் நாயர் (72) என்பவர் வசித்து வந்துள்ளார்‌. இவர் சித்த மருத்துவர். இவர் தன் வீட்டிலேயே கிளினிக் வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி பிரசன்னா (62). இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கும் நிலையில் இருவருக்கும் திருமணமாகிவிட்டது. இவருடைய மகனும் சித்த மருத்துவராக இருக்கிறார். இந்நிலையில் நேற்று இரவு வயதான தம்பதி மட்டும் வீட்டில் தனியாக இருந்த அவர்கள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளனர்.

இது தொடர்பாக அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் காவல்துறையினர்  சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்‌. அதன் பிறகு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட இடத்தில் ஒரு செல்போன் கிடப்பது தெரிய வந்தது. அந்த செல்போனை வைத்து மகேஷ் என்பவரை காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் தற்போது கைது செய்துள்ளனர். மேலும் இந்த கொலை தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.