தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியங்குடி பிச்சாண்டி கீழ தெருவில் கருப்பசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் மகள் முனீஸ்வரி(16) புளியங்குடியில் இருக்கும் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கருப்பசாமி இறந்து விட்டதால் மாரியம்மாள் கூலி வேலைக்கு சென்று மகளைகவனித்து வந்துள்ளார். கடந்த 18-ஆம் தேதி பள்ளிக்கு சென்ற முனீஸ்வரி மாலையில் வீட்டிற்கு வந்து திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய மாரியம்மாள் தனது மகள் தூக்கில் தொங்குவதை கண்டு கதறி அழுதார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் முனீஸ்வரி எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில் நான் பள்ளிக்கு தாமதமாக சென்றதால் ஆசிரியை என்னை திட்டி வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்தார். இதனால் மன உளைச்சலில் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என எழுதியுள்ளார். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க பள்ளி முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.