சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அழகு நாச்சியாபுரத்தில் துரைப்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துரைப்பாண்டி சென்னை தியாகராஜர் நகரில் இருக்கும் தனியா சூப்பர் மார்க்கெட்டில் ஹேர் டை வாங்கியுள்ளார். அதன் விலை 29 ரூபாய் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் கடைக்காரர்கள் கூடுதலாக 10 ரூபாய் சேர்த்து 39 ரூபாய் வாங்கியுள்ளனர். இதுகுறித்து கடை நிர்வாகத்தினரிடம் கேட்டபோது அவர்கள் உரிய பதில் அளிக்கவில்லை.

இது தொடர்பாக துரைப்பாண்டி சிவகங்கை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற தலைவர் பாலசுப்பிரமணியம், உறுப்பினர் குட்வின் சாலமன் ராஜ் ஆகியோர் தனியார் நிறுவனத்தின் சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி துரை பாண்டிக்கு 25 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு, வழக்கு செலவு தொகை 5 ஆயிரம், கூடுதலாக வசூலித்த 10 ரூபாய் ஆகியவற்றை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.