நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் நந்தட்டி பகுதியை தலைமை இடமாகக் கொண்டு தனியார் நிறுவனம் செயல்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் கிளைகள் சென்னை, கோவை, சேலம், ஊட்டி, கேரளா, மைசூர், ஓசூர் ஆகிய இடங்களில் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் இயக்குனர்களாக கூடலூர் சேர்ந்த துரைராஜ், அவரது மனைவி சாரதா ஆகியோர் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் அதிக வட்டி தருவதாக கூறி இவர்கள் பொதுமக்களிடம் இருந்து முதலீடு பெற்றுள்ளனர்.

ஆனால் இதுவரை முதலீடாக பெற்ற பணத்தை தம்பதியினர் திரும்ப கொடுக்காமல் மோசடி செய்ததாக தெரிகிறது. இது தொடர்பாக கோவையைச் சேர்ந்த சபரிநாதன் என்பவர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் துரைராஜ், சாரதா மீது வழக்கு பதிந்து தலைமறைவாக இருக்கும் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஆதாரங்களுடன் புகார் அளிக்க வேண்டும் என போலீசார் கூறியுள்ளனர்.