முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் அருகே இருக்கும் சோழபுரம் மேலான மேடு பகுதியைச் சேர்ந்த திருஞானசம்பந்தம் என்பவர் முன்னாள் பாமக நகர தலைவராவார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கும் இட பிரச்சனை ஏற்பட்டு இதன் காரணமாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வந்த நிலையில் சென்ற இரண்டு நாட்களுக்கு முன்பாக ராஜேந்திரன் மற்றும் அவரின் குடும்பத்தினர் திருஞானசம்பதத்தை அறிவாளால் வெட்டிவிட்டு தப்பித்து விட்டனர்.

இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டது தெரிந்தது. இதை அடுத்து போலீசார் ராஜேந்திரன், அவரின் மகன் மணிகண்டன், விஷ்ணுப்ரியா, விஷ்ணு பிரியாவின் கணவர் ராஜா மற்றும் 17 வயது சிறுவன் என ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து வலை வீசி தேடி வந்த நிலையில் விஷ்ணு பிரியா, ராஜா மற்றும் 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார்கள். மேலும் தலைமறைவாக இருக்கும் ராஜேந்திரன் மற்றும் மணிகண்டனை போலீசார் தேடி வருகின்றார்கள்.