டெல்லி பல்கலைக்கழகத்தில், செப்டம்பர் மாதம் நடந்த மாணவர் சங்க தேர்தலில் ஆர்எஸ்எஸ்-ஐ சேர்ந்த அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பு வெற்றி பெற்றது. இந்நிலையில், ஏபிவிபி-யின் இணைச் செயலாளர் தீபிகா ஜா உள்ளிட்ட இரண்டு உறுப்பினர்கள், டாக்டர் பீம் ராவ் அம்பேத்கர் கல்லூரியில் ஆசிரியர் சுஜித் குமாரை, போலீசார் முன்னிலையில் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் தீபிகா ஜா ஆசிரியரின் கன்னத்தில் அறைந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுஜித் குமார், கல்லூரியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார். அவர், தேசிய மாணவர் சங்க உறுப்பினர் ஒருவரை ஏபிவிபி உறுப்பினர்கள் தாக்கியது குறித்து, போலீசார் முன்னிலையில் விசாரித்துக் கொண்டிருந்தபோது இந்தத் தாக்குதல் நடந்தது. இதைத் தொடர்ந்து, பல்கலைக்கழக ஆசிரியர்கள் இந்தச் சம்பவத்தைக் கண்டித்து, தாக்குதல் நடத்திய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். முன்னதாக, மத்தியப் பிரதேசத்தில் ஏபிவிபி தலைவர்கள் மூவர், மாணவிகள் உடை மாற்றுவதை ரகசியமாக வீடியோ எடுத்து சிக்கியது குறிப்பிடத்தக்கது.