சென்னை மாவட்டத்தில் உள்ள பாடியநல்லூர் பி.டி மூர்த்தி நகரில் செந்தில்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு செந்தில்குமாருக்கு திருமணம் நடைபெற்றது. இவர் தனது பிறந்த நாளை முன்னிட்டு நண்பர்களுக்கு விருந்து வைக்க முடிவு செய்தார். இதற்காக செந்தில்குமார் தனது நண்பர்களுடன் அண்ணாநகர் 2-வது அவென்யூவில் இருக்கும் ஹோட்டலுக்கு சென்று நள்ளிரவு 12 மணி அளவில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இதனையடுத்து நண்பர்கள் பிரியாணி சாப்பிட்டுள்ளனர்.

அதே ஹோட்டலில் பி.டி சத்திரத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் நண்பர்களுடன் சாப்பிட வந்துள்ளார். இந்நிலையில் செந்தில்குமார் தரப்பினருக்கும், பிரகாஷ் தரப்பினருக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில் படுகாயமடைந்த செந்தில்குமரை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் பிரகாஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.