கடலூர் மாவட்டத்தில் உள்ள கழுதூர் கிராமத்தில் தியாகராஜர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் மாதவன்(17) 12-ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளார். இந்நிலையில் பழுதான சைக்கிளை சரி செய்வதற்காக மாதவன் நேற்று மாலை தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் வேப்பூருக்கு சென்று கொண்டிருந்தார்.

இந்நிலையில் கழுதூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது பின்னால் வந்த கார் தியாகராஜன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த மாதவன் தனது தந்தை கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தியாகராஜனை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.