சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் விம்கோ நகர் பூம்புகார் நகர் பகுதியில் விவேகானந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவர் திமுகவில் ஐந்தாவது வார்டு வட்ட பிரதிநிதியாக இருக்கிறார். இவரது மகன் காமராஜ் இன்ஜினியரிங் பட்டதாரி. அரசு ஒப்பந்ததாரர்களான தந்தையும், மகனும் ஆர்வி இன்ஜினியரிங் என்ற பெயரில் மாநகராட்சி ஒப்பந்த பணிகளை எடுத்து செய்து வந்தனர். இவர்களது வீட்டிற்கு கீழ் பகுதியில் அலுவலகம் அமைந்துள்ளது. நேற்று காலை அலுவலகத்தில் காமராஜ் மட்டும் இருந்த போது ஆறு பேர் கொண்ட கும்பல் முகமூடி அணிந்து வந்தனர்.

அவர்கள் காமராஜை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் திரண்டு வந்து காமராஜை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் காமராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் காமராஜ் வெட்டி கொலை செய்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். உயிரிழந்த காமராஜருக்கு யாமினி என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.