கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதி மணியக்காரபாளையம் கீரத்தோட்டம் பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தினகர்(30). இவர் தனது தந்தையுடன் இணைந்து பழைய பொருட்களை வாங்கி விற்பனை செய்து வருகிறார். தினமும் தினகர் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்து வந்துள்ளார். இந்நிலையில் உடலை கட்டுக்கோப்பாக வைக்க வேண்டும் என்ற ஆசையில் தினகர் அசைவ உணவை அதிக அளவு சாப்பிட்டு உடற்பயிற்சி அதிகமாக செய்துள்ளார்.

மேலும் புரோட்டீன் பவுடர்களை அதிகமாக வாங்கி சாப்பிட்டதாக கூறப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதால் தினகர் ஜிம்முக்கு செல்லவில்லை. மாறாக வீட்டில் இருந்தே உடற்பயிற்சி செய்துள்ளார். அப்போது அவருக்கு வயிறு வலி அதிகமாகி வாந்தி ஏற்பட்டது. இதனையடுத்து தினகர் கோவையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி தினகர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், அதிக அளவு புரோட்டின் பவுடர் சாப்பிட்டதாலும், சிறுநீரகம் செயலிழந்ததாலும் வயிற்று வலி ஏற்பட்டு தினகர் உயிரிழந்தது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.