கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அழகுமுத்து பவுண்டர் தோட்டத்தில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவண்ணாமலையில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கல்பனா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஹர்ஷினி(3), ஹாசினி என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருந்துள்ளனர். நேற்று முன்தினம் ஹர்ஷினி வீட்டிற்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த கல்பனா தனது குழந்தையை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார்.

அப்போது வீட்டிற்கு முன்பு தரையில் பதிக்கப்பட்டிருந்த குடிநீர் தொட்டிக்குள் ஹர்ஷினி மூழ்கிய நிலையில் கிடப்பதை கண்டு கல்பனா அதிர்ச்சியடைந்தார். உடனடியாக தனது குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர் ஹர்ஷினி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.