மதுரை அதிமுக மாநாட்டில் பேசிய அக்கட்சியின் அவை தலைவர் தமிழ் மகன் உசேன்,  அருமை தோழர்களே ரெண்டு நிமிடம் தான்….  ரெண்டே நிமிஷம் தான் நான் பேசுவேன்.  திராவிட இயக்கத்தினுடைய பொன்னான வளர்ச்சி…  திராவிட பேரியக்கத்தினுடைய பரிணாம வளர்ச்சியை இந்த மண்ணிற்கு தந்தது மூன்றெழுத்து தான்.

என் தலைவன் சொன்னான் மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும், உள்ளம் என்றொரு ஊர் இருக்கும். அந்த ஊருக்குள் எனக்கு ஒரு பெயர் இருக்கும் என்று சொன்ன புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சொன்ன பாடலுக்கு ஏற்ப இந்த மண்ணிலே மூன்றெழுத்து மந்திரம் தான் இருக்கு.

நீங்கள் மறந்துவிடக்கூடாது திராவிட பேரியக்கத்தினுடைய பரிணாம வளர்ச்சியை உருவாக்கிய மூன்று எழுத்து தான் தந்தை என்று அழைக்கக்கூடிய ”ஈ வே ரா” என்ற மூன்றெழுத்து. ”ஈவேரா” பெரியாருடைய மறைவிற்கு பின்னால் திராவிட பேர் இயக்கத்தை இந்த மண்ணிலே கட்டி காப்பாற்றிய மூன்றெழுத்துதான் செந்தமிழ் நாடென்னும் போதினிலே…  இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்று சொன்ன பாரதி பாடிய இந்த நாட்டை செந்தமிழ் தமிழ்நாட்டாக மாற்றிய மூன்றெழுத்து தான் காஞ்சி என்ற மூன்றெழுத்தில் பிறந்த ”அண்ணா” என்ற மூன்றெழுத்து.

அண்ணா உடைய மறைவுக்கு பின்னால் திராவிட  பேரியக்கத்தை இயக்கத்தை இந்த மண்ணிலே கட்டி காப்பாற்றி,  17 லட்சம் தொண்டர்களை கொண்டு உருவாக்கி,  இயக்கத்தை கண்ட மூன்றெழுத்து தான் பரங்கிமலை சிங்கம் – பால் போற்றும் தங்கம் – நம்முடைய அங்கம் இதயத்து மன்னன், சத்தியா ஈன்றெடுத்த என் தலைவன் ”எம் ஜி.ஆர்” என்ற மூன்றெழுத்து.

எம்ஜிஆர் உடைய மறைவுக்கு பின்னால் உடைந்து போன இயக்கத்தை ஊக்கம் பெறச் செய்து,  ஒன்றை கோடி தொண்டர்களை உருவாக்கிய மூன்று எழுத்து தான் புரட்சி புயலாக கிளம்பிய மூன்றெழுத்து அம்மா, அம்மா என்ற மூன்றெழுத்து. அம்மாவுடைய மறைவுக்கு பின்னால் மெரினா என்ற மூன்றெழுத்தில் கண்ணீர் சிந்தி கொண்டிருந்தோம்.

அந்த நேரத்திலே தான் நான் இருக்கின்றேன் என்று தென்றலாக.. புயலாக… புரட்சி நாயகனாக… புரட்சித் தலைவனாக … புறப்பட்டு வந்த மூன்றெழுத்து தான் சேலம் என்ற மூன்றெழுத்தில் பிறந்த ”இ.பி.எஸ்” என்ற மூன்றெழுத்து. அந்த ”இபிஎஸ்” என்ற மூன்றெழுத்து ”மதுரை” என்ற மூன்றெழுத்தில் கால் பதித்திருக்கிறது. ”மாநாடு”  என்ற மூன்றெழுத்தில் ”வெற்றி” என்ற மூன்றெழுத்தோடு நடைபெற வேண்டும் என்று கேட்பது உங்கள் தொண்டன் ”குமரி” என்ற மூன்றெழுத்தில் பிறந்த ”தமிழ்” மூன்றெழுத்து ”மகன்” மூன்றெழுத்து ”உசேன்” மூன்றெழுத்து ”நன்றி’‘ என்ற மூன்றெழுத்தோடு விடைபெறுகின்றேன் விடுகின்றேன் நன்றி வணக்கம் என பேசி முடித்தார்.