சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூரில் இருந்து 15-க்கு மேற்பட்ட பக்தர்கள் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு வேனில் சென்று கொண்டிருந்தனர். அந்த வேனை இளங்கோ என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கூச்சிக்குளத்தூர் அருகே சென்ற போது டயர் வெடித்ததால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி தடுப்பு கட்டை மீது மோதி சாலையில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த மச்ச காந்தி என்ற பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தீபிகா, ராணி உட்பட 8 பேரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.