கரூர் மாவட்டத்தில் உள்ள புகலூர் காகித ஆலை குடியிருப்பு பகுதியில் தயாளன்- பிருந்தா தேவி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் தயாளன் காகித ஆலையிலும், பிருந்தா தேவி தபால் நிலையத்திலும் ஊழியராக வேலை பார்த்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதுடைய மித்ரேஸ்வரன் என்ற ஆண் குழந்தை இருந்துள்ளது. நேற்று முன்தினம் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது.

இதனால் கோபத்தில் பிருந்தா தேவி இரவு 12 மணிக்கு தனது மகனை ஸ்கூட்டரில் ஏற்றி கொண்டு அவர்கள் முன்பு குடியிருந்த புகழிமலைக்கு சென்றுள்ளார். அப்போது பிருந்தா தேவி மித்ரேஸ்வரனை கீழே இறக்கிவிட்டு ஸ்கூட்டரை நிறுத்திக் கொண்டிருந்தபோது அருகே இருந்த கிணற்றுக்குள் குழந்தை நிலைதடுமாறி விழுந்தான். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பிருந்தா தேவி அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் தனது மகனை காப்பாற்ற முயற்சி செய்தார்.

ஆனாலும் தண்ணீரில் மூழ்கி மித்ரேஸ்வரன் உயிரிழந்தான். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு குழந்தையின் உடலை மீட்டனர். பின்னர் குழந்தையின்  உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.