சேலம் மாவட்டத்தில் உள்ள ஒக்கிலிபட்டி தண்ணீதாசனூர் பகுதியில் காளியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கரும்பு வெட்டும் தொழிலாளி. இவருக்கு லதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சரவணன் என்ற மகனும், சங்கீதா என்ற மகளும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் திருமணமான தனது மகள் சங்கீதாவின் வீட்டிற்கு காளியப்பன் மதுபோதையில் சென்றுள்ளார்.

அங்கு வைத்து மயக்கம் வருவதாக கூறி சிறிது நேரம் படுத்திருந்த காளியப்பன் வாயிலிருந்து நுரை தள்ளிய நிலையில் பேச்சு, மூச்சு இல்லாமல் கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் காளியப்பனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் காளியப்பன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் எடப்பாடி பகுதியில் இருக்கும் மது கடையில் காளியப்பன் நேற்று மாலை நேரத்தில் மது அருந்தியது தெரியவந்தது. ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு எடப்பாடி அருகே மது குடித்த ஒருவர் பலியானார். தற்பொழுது மீண்டும் மது குடித்த காளியப்பன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.