ரிசர்வ் வங்கி சமீபத்தில் 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாகவும், வருகிற செப்டம்பர் மாதத்திற்குள் வங்கியில் ரூபாய் நோட்டுகளை கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் எனவும் அறிவித்தது. இதனால் பலரும் வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து மாற்றி வருகின்றனர். சில இடங்களில் பெட்ரோல் விற்பனை நிலையங்களிலும் 2000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்படுகிறது. இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் உள்ள கொடுங்கையூரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஹரி பிரசாத் என்பவர் பெரம்பூர் பேருந்து நிலையம் அருகே இருக்கும் பெட்ரோல் பங்கில் 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுள்ளார்.

இதனையடுத்து ஹரி பிரசாத் ஊழியரிடம் 2000 ரூபாய் நோட்டை கொடுத்தார். ஆனால் அந்த பெட்ரோல் பங்க் மேலாளர் 2000 ரூபாய் பணத்தை வாங்க மறுத்தார். இதனால் ஹரி பிரசாத் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. சில்லறை இல்லாவிட்டால் மோட்டார் சைக்கிளில் போட்ட பெட்ரோலை உறிஞ்சி எடுத்து விடு என ஊழியரிடம் மேலாளர் கூறியதாக தெரிகிறது. இதனால் அந்த ஊழியர் பெட்ரோலை உறிஞ்சி எடுத்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.