கடலூர் மாவட்டத்தில் உள்ள வெளிசெம்மண்டலம் பகுதியில் கூலி வேலை பார்க்கும் துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் 5-க்கும் மேற்பட்ட கோழிகளை வளர்த்து வருகிறார். அதில் ஒரு கோழி அடைகாத்து வந்த சில முட்டைகளில் இருந்து குஞ்சு பொரித்தது. நேற்று முன்தினம் துரை கோழி கூட்டை திறந்து பார்த்தபோது கோழி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

அதன் அருகிலேயே ஒரு பாம்பு முட்டைகளை விழுங்கி கொண்டிருந்ததை கண்டு உடனடியாக பாம்பு பிடி வீரர் செல்லாவுக்கு தகவல் தெரிவித்தார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற செல்லா 6 அடி நீளம் உடைய நல்ல பாம்பை பத்திரமாக பிடித்தார். இதனையடுத்து அந்த பாம்பு திடீரென தான் விழுங்கிய ஏழு முட்டைகளை அடுத்தடுத்து கக்கியது. ஒரு கோழி குஞ்சையும் கக்கியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.