சென்னை மாவட்டத்தில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டை காத்பாடா பகுதியில் ஞானம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இருவரும் கூலி வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் ஞானத்தின் தந்தை செல்வராஜ் இறந்துவிட்டார். இதனால் தனது கணவர் ஞானத்திற்கு சட்டபூர்வ வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக லட்சுமி தண்டையார்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு இ-சேவை மையத்தின் மூலம் விண்ணப்பித்துள்ளார். நீண்ட நாட்களாகியும் சான்றிதழ் கொடுக்காமல் வருவாய் அலுவலர்கள் காலம் தாழ்த்தியுள்ளனர். இதனால் லட்சுமி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரடியாக சென்றுள்ளார்.

அப்போது அலுவலக உதவியாளர் ஒருவர் சான்றிதழ் வேண்டும் என்றால் தாசில்தாருக்கு பணம் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த லட்சுமி சமூக ஆர்வலர் ஒருவருடன் தனது நகையை அடகு வைத்து 15 ஆயிரம் ரூபாய் பணத்தை அலுவலக உதவியாளர் தனசேகர் என்பவரிடம் கொடுத்துள்ளார். அதனை வாங்கி கொண்ட தனசேகர் சான்றிதழ் கிடைத்துவிடும் என கூறினார். இதனை லட்சுமியுடன் சென்ற நபர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அந்த வீடியோ தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.