தேனி மாவட்டத்தில் உள்ள கருநாக்கமுத்தன்பட்டியில் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காஷ்மீரில் ராணுவ வீரராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த மே மாதம் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த தமிழ்ச்செல்வன் மோட்டார் சைக்கிளில் குமணன் குழுவில் இருந்து ஊருக்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கடமலைகுண்டு அருகே சாலை வளைவில் திரும்ப முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த தமிழ்செல்வனை அக்கம் பக்கத்தினர் மீட்டு தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தமிழ்ச்செல்வன் மதுரையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சுயநினைவு இழந்த தமிழ்ச்செல்வனுக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் தமிழ்ச்செல்வன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.