விபுல்ஷா தயாரிப்பில் டைரக்டர் சுதிப்டோ சென் இயக்கத்தில் சென்ற மே 5-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆன படம் “தி கேரளா ஸ்டோரி”. இந்த படம் கேரளாவை சேர்ந்த 32 ஆயிரம் இந்து இளம் பெண்களை மூளைச்சலவை செய்து மதம் மாற்றி ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக சித்தரித்து எடுக்கப்பட்டு உள்ளது.

இப்படத்துக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக தியேட்டர்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. அதன்பின் தமிழகத்தில் மால்களிலுள்ள திரையரங்குகளில் மட்டும் இப்படம் திரையிடப்பட்ட நிலையில், மே 8 முதல் திரையிடப்படாது என அறிவிக்கப்பட்டது. சட்ட ஒழுங்கு பிரச்சினை, படத்துக்கான வரவேற்பு இல்லாததால் திரையரங்க நிர்வாகங்கள் இம்முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியது. சலசலப்பு அனைத்தையும் இந்த படம் முறியடித்து முன்னேறி கொண்டிருப்பது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

இதுகுறித்து திரைப்பட வர்த்தக ஆய்வாளரான ஆதர்ஷ் வெளியிட்ட செய்தியில், தொடக்க நாளில் ஈட்டிய வசூலை விட ஞாயிற்றுக்கிழமை படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் இரட்டிப்பாகியுள்ளது. அதாவது, தொடக்க நாளில் ரூ.8.03 கோடியும், அடுத்த நாள் ரூ.11.22 கோடியும் இந்த படம் வசூலித்து இருந்தது என தெரிவித்துள்ளார். 3வது நாளான நேற்று முன்தினம் (மே 7) பாக்ஸ் ஆபீசில் ரூ.16 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது. இதன் காரணமாக முதல் வார இறுதியில் பட வசூல் மொத்தம் ரூ.35.25 கோடியாக இருக்கிறது.