விபுல்ஷா தயாரிப்பில் டைரக்டர் சுதிப்டோ சென் இயக்கத்தில் சென்ற மே 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆன படம் “தி கேரளா ஸ்டோரி”. இந்த படம் கேரளாவை சேர்ந்த 32 ஆயிரம் இந்து இளம் பெண்களை மூளைச்சலவை செய்து மதம் மாற்றி ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக சித்தரித்து எடுக்கப்பட்டு உள்ளது.

இப்படத்துக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அசம்பாவிதங்களை தவிர்பபதற்காக தியேட்டர்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. அதன்பின் தமிழகத்தில் மால்களிலுள்ள திரையரங்குகளில் மட்டும் இப்படம் திரையிடப்பட்ட நிலையில், மே 8 முதல் திரையிடப்படாது என அறிவிக்கப்பட்டது. சட்ட ஒழுங்கு பிரச்சினை, படத்துக்கான வரவேற்பு இல்லாததால் திரையரங்க நிர்வாகங்கள் இம்முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியது.

இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தடைவிதித்து முதல் மந்திரி மம்தா பானர்ஜி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். வெறுப்பு, வன்முறை உள்ளிட்ட சம்பவங்களை தவிர்க்கவும் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டவும் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மம்தா தெரிவித்துள்ளார்.