வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். மேலும் மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் தென்கிழக்கு கடற்பகுதி, அதனை ஒட்டிய கடற்பகுதிகளில் சுழற்காற்றானது 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும். இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதால், அங்குள்ள மீன்பிடி துறைமுகத்தில் இருந்த 245 விசைப்படகுகளும் அதே இடத்தில நிறுத்தி வைக்கப்பட்டன. இதனையடுத்து வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதை கப்பல்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு, தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ஏற்றப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் வழக்கம் போல் வெயில் அடித்த நிலையில் நேற்று காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டும் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்பட்டது.