சென்னையை அடுத்த புழல் லட்சுமிபுரம் குமரன் தெருவில் வசிப்பவர் சுதாசந்தர் (22).  சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த இவர், நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் ஒரு பெண்ணுடன் புழல் லட்சுமிபுரம் கல்பாளையம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரி வெட்டிக் கொலை செய்தனர். உடனே இது பற்றி தகவலறிந்த கொளத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து கொலை செய்யபட்ட வாலிபருடன் வந்த பெண்ணை பிடித்து விசாரணை செய்ததில், அந்த பெண்ணின் பெயர் ராகவி (19) என்பது தெரியவந்தது. இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சென்னையை அடுத்த ஆவடி மோரை பகுதியில் வசித்து வந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த சுதாசந்தர் என்பவரை உயிருக்கு உயிராக காதலித்து வந்தது தெரியவந்தது. இது பற்றி அறிந்த ராகவியின் பெற்றோர்கள் உடனடியாக ராகவிக்கு, அவரது உறவுக்காரரான வசந்த் என்பவரை  2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து வைத்தனர்.

தற்போது இவர்களுக்கு 2 மாத பெண் குழந்தை உள்ள நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராகவி பிரிந்து சென்றுவிட்டார். இதனையடுத்து அவரது முன்னாள் காதலருடன் சேர்ந்து வாழ முடிவு செய்தார். அதன்படி 2 மாதங்களுக்கு முன் வீட்டை விட்டு கைக்குழந்தையுடன் ராகவி வெளியேறினார். இந்நிலையில் சுதா சந்தருடன் புழல் லட்சுமிபுரத்தில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இதன்பின் இதை பற்றி தெரிந்த ராகவியின் கணவர் வசந்த் ஆத்திரமடைந்தார். எனவே வசந்த் மற்றும் அவனின் உறவினர்கள் அனைவரும்  அவர்களை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் சுதாசந்தரை கொலை செய்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இந்த கொலை குற்றவாளிகளை 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு வலைவீசி தேடி வருகின்றனர்.