தேனி மாவட்டத்தின் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், ஆட்சிமொழி பயிலரங்கு மற்றும் கருத்தரங்கு கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது. இதில் கடந்த 2020-ஆம் ஆண்டு ஆட்சிமொழி செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய தேனி அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு கலெக்டர் கேடயத்தை வழங்கி பாராட்டினார். மேலும், 2021-ஆம் ஆண்டிற்கான தமிழ்ச்செம்மல் விருதை தேனியை சேர்ந்த எழுத்தாளர் தேனி சீருடையான் பெற்றார். அவருக்கு சால்வை அணிவித்து கலெக்டர் கவுரவித்தார்.

இந்நிகழ்வில் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஆட்சிமொழி வரலாறு, ஆட்சிமொழி செயலாக்கம், அரசாணைகள், கணினித் தமிழ், மொழிப்பயிற்சி, அலுவலக குறிப்புகள், கடித வரைவுகள், செயல்முறை ஆணைகள் தயாரித்தல், மொழிப்பெயர்ப்பு போன்றவை குறித்து தமிழறிஞர்களால் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் அருள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி, தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனர் சந்திரா, உதவி இயக்குனர் இளங்கோ மற்றும் பலர் பங்கேற்றனர்.