குஜராத் ராஜ்கோட் மாவட்டத்திலுள்ள விஞ்சியா எனும் கிராமத்தில் வசித்து வந்தவர்கள் ஹேமுபாய் மக்வானா (38), ஹன்சா பென்(35) தம்பதியினர். ஹேமுபாய் மற்றும் ஹன்சாபென் தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இத்தம்பதியினருக்கு மாந்திரீக பூஜைகளில் நம்பிக்கை இருந்து வந்துள்ளது.

இதனால் கடந்த ஓராண்டு காலமாக தங்களது குடிசையில் தினசரி மாந்திரீக பூஜைகளை செய்து வந்து உள்ளனர். இந்த நிலையில் சென்ற சனிக்கிழமை மாலை ஹோம குண்டத்தில் நெருப்பு வளர்த்து பூஜை செய்த தம்பதியினர், மறுநாள் காலை தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்தனர்.  இது தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டபோது பகீர் உண்மைகள் வெளியாகியுள்ளது.

அதாவது, தம்பதியினர் தங்கள் தலையை தாங்களே வெட்டி நரபலி கொடுக்கும் விதமாக எந்திரம் ஒன்றை உருவாக்கி வீட்டருகே வைத்து உள்ளனர். சம்பவ நாளன்று ஹோமம் வளர்த்து அந்த எந்திரத்தில் தலையை கொடுத்து தாங்களே அதை இயக்கி தலை துண்டாக்கிக்கொண்டு நரபலியாகி உள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு தம்பதியினர் தங்களை தாங்களே நரபலி கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.