அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி  X தளத்தில் அக்கட்சியினரோடு கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், நான் சில விஷயங்களை உங்களிடம் வெளிப்படையாக சொல்ல விரும்புகின்றேன். சோதனைகள் வரும்போது நிச்சயமாக எல்லோருக்கும் ஒரு தயக்கம் வரும். அந்த தயக்கம் தாண்டிய ஒரு துணிச்சல் இருந்தால் தான், அதை கடந்து வெற்றி பெற முடியும்.

எனக்கு ஒவ்வொரு முறை சோதனை வரும் போது,  எனக்கு தைரியம் அளிப்பது இரண்டு விஷயங்கள்தான். ஒன்று நம் இருபெரும்  தலைவர்கள் இந்த கட்சிக்கு அளித்திருக்கின்ற ஆசி. மற்றொன்று இரண்டு கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்கள் ஆகிய நீங்கள் எல்லாம் நம் கழகத்திற்கு அரணாக இருக்கின்ற தைரியம் தான். இதுதான் என்னை இன்றுவரை இயக்கிக் கொண்டிருக்கிறது.

அம்மா கூறியது போல நம் கழகம் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் மக்களுக்காகவே இருக்கும்,  இயங்கும் என்ற கனவின் நிறைவேற்ற  நாம் ஒன்று சேர்ந்து பயணிப்போம்,  வெற்றி காண்போம். இந்த விடியா  திமுக அரசு என்பது பொய்களால் கட்டமைக்கப்பட்ட ஒரு மணல் கோட்டை. தேர்தல் வாக்குறுதி என்று ஒரு புத்தகத்தை தேர்தலுக்கு முன் வெளியிட்டு,

தேர்தலுக்கு பின் அதை காற்றில் பறக்க விட்டு,  ஒரு துண்டு சீட்டு அளவு கூட வாக்குறுதியை நிறைவேற்றாமல்… கவர்ச்சிகரமான விளம்பரங்களாலும்,  போட்டோ சூட்டுகள் வைத்தே காலத்தை கடத்துகின்றார்கள் என தெரிவித்தார்.