ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் ராஜீவ் நகரில் பி.காம் பட்டதாரியான முருகேசன்(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பிரியதர்ஷினி(32) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு வைஷ்ணவன்(9) என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் நிரந்தர வேலை இல்லாததால் முருகேசன் கடந்த 2 மாதங்களாக வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். மேலும் முருகேசன் வீட்டில் இருந்த நகை மற்றும் பொருட்களை விற்று மது குடித்து வந்துள்ளார்.

கடந்த 28-ஆம் தேதி முருகேசன் தனது மனைவியிடம் புதிதாக செல்போன் வாங்கி தா என கேட்டுள்ளார். அதற்கு என்னால் வாங்கி தர முடியாது என பிரியதர்ஷினி மறுப்பு தெரிவித்தார். இதனால் ஏற்பட்ட தகராறில் பிரியதர்ஷினி தனது மகனுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனையடுத்து முருகேசன் தனது மனைவியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். அப்போது நீங்களே வந்து என்னை அழைத்து செல்லுங்கள் என பிரியதர்ஷினி கூறியுள்ளார்.

நேற்று முருகேசனின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அறிந்த பிரியதர்ஷினி பெற்றோருடன் வந்து பார்த்தபோது படுக்கையறையில் முருகேசன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முருகேசனின் உடலை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.