ரயிலில் முறையான பயணச்சீட்டு இல்லாமல் அல்லது இருக்கை கிடைக்காமல் பயணிக்கும் பயணிகளுக்கு அபராதம் விதிப்பதே வழக்கமான நடைமுறையாகும். ஆனால், அதற்கு மாறாக இந்திய ரயில்வேயில் நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவம், மனிதநேயத்திற்கும் நமது ராணுவ வீரர்கள் மீதான மரியாதைக்கும் மிகச் சிறந்த சான்றாக அமைந்துள்ளது.

ரயிலில் கழிவறை மற்றும் கதவு அருகே தரையில் அமர்ந்து பயணித்த ஒரு இளம் இந்திய ராணுவ வீரருக்கு, பயணச்சீட்டுப் பரிசோதகர் அபராதம் விதிக்காமல் ஸ்லீப்பர் பெட்டியில் இருக்கை ஒதுக்கித் தந்த சம்பவம் இணையவாசிகளின் இதயங்களை நெகிழ வைத்துள்ளது.

ரயிலில் பயணச்சீட்டு பரிசோதனையின் போது, கழிவறைக்கு அருகே தரைப்பகுதியில் அமர்ந்திருந்த ஒரு இளம் வீரரிடம் TTE பயணச்சீட்டைக் கேட்டுள்ளார். அப்போது அந்த வீரர் தனது ராணுவ அடையாள அட்டையைக் காண்பித்து, ரயிலில் இருக்கை கிடைக்காததால் வேறு வழியின்றி தரையில் அமர்ந்து பயணிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதைக் கேட்ட TTE அவருக்கு அபராதம் விதிக்கவோ அல்லது அங்கிருந்து செல்லுமாறு கூறவோ இல்லை. மாறாக, உடனடியாகத் தனது டேப்லெட்டில் காலி இருக்கைகள் உள்ளதா என்று பரிசோதித்து, ஸ்லீப்பர் பெட்டியில் காலியாக இருந்த கீழ் இருக்கையை அந்த வீரருக்கு ஒதுக்கி, அவரே நேரில் அழைத்துச் சென்று அமர வைத்தார்.

பயணத்தின் சிரமத்தைப் போக்கிய TTE, அந்த வீரருக்குக் குடிநீர் பாட்டிலும் வழங்கி, நாட்டிற்காக அவர் ஆற்றி வரும் சேவைக்குக் கையசைத்துத் தனது நெஞ்சார்ந்த மரியாதையைத் தெரிவித்தார். இச்சம்பவம் குறித்த வீடியோவை TTE  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, “நீங்கள் நாட்டிற்காகச் சேவை செய்கிறீர்கள் என்றால், உங்களுக்காகச் சேவை செய்ய நாங்களும் இந்திய ரயில்வேயும் எப்போதும் தயாராக இருக்கிறோம்.

ஜெய் ஹிந்த்!” என்று பதிவிட்டுள்ளார். சட்டத்தையும் கடந்து மனிதநேயத்தையும் தேசப்பற்றையும் வெளிப்படுத்திய இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி லட்சக்கணக்கான மக்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

“>