அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி  X தளத்தில் அக்கட்சியினரோடு கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், இந்த விடியா  திமுக அரசு என்பது பொய்களால் கட்டமைக்கப்பட்ட ஒரு மணல் கோட்டை. தேர்தல் வாக்குறுதி என்று ஒரு புத்தகத்தை தேர்தலுக்கு முன் வெளியிட்டு,  தேர்தலுக்கு பின் அதை காற்றில் பறக்க விட்டு,  ஒரு துண்டு சீட்டு அளவு கூட வாக்குறுதியை நிறைவேற்றாமல்… கவர்ச்சிகரமான விளம்பரங்களாலும்,  போட்டோ சூட்டுகள் வைத்தே காலத்தை கடத்துகின்றார்கள்.

100% வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என்று பச்சை பொய்யை வாய் கூசாமல் சொல்கிறார் முதலமைச்சர் திரு.ஸ்டாலின் அவர்கள்.  தன்னைத் தானே நம்பர் ஒன் முதலமைச்சர் என்று தம்பட்டம் அடித்துக் கொள்கிறார். ஆம் நம்பர் ஒன் முதலமைச்சர் தான். எதில் ? சுய  விளம்பரத்தில்….  போட்டோவுக்கு போஸ் கொடுப்பதில்….  கலெக்ஷன்,  கமிஷன்,  கரெப்க்ஷனில்… வாக்களித்த மக்களை ஏமாற்றுவதில்…. மாநில உரிமைகளை  தாரை விற்பதில்… சினிமா படங்களை முதல் ஆளாய் பார்த்து திரை விமர்சனம் கொடுப்பதில் நம்பர் ஒன் முதலமைச்சர் திரு. ஸ்டாலின்.

சினிமா என்றதும் எனக்கு நினைவுக்கு வருவது மக்களுக்கு பொழுது போக்காக இருக்கின்ற சினிமா துறையை கூட விட்டு வைக்கவில்லை.  தன் குடும்ப ஆதிக்கத்தை செலுத்துகிறது இந்த விடியா திமுக அரசு.  தங்கள் குடும்ப நிறுவனங்கள் தயாரித்து வெளியிடுகின்ற  படங்களுக்கு மட்டும் சிறப்பு காட்சிக்கு அனுமதிகள் கொடுப்பதும்,  பிற தயாரிப்புகளுக்கு சிறப்பு அனுமதி மறுக்கப்படுவதும் வாடிக்கை. அப்படி அனுமதி பெற தங்கள் குடும்ப நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யுமாறு நிர்பந்திக்கப்படுகின்றனர்.

விரைவில் வெளிவர இருக்கும் பிரபல நடிகர் ஒருவரின் படம் ஒன்று இதே போல் சிக்கல் இருப்பதாக ஊடகத்திலும் பத்திரிக்கையிலும் செய்தி வாயிலாக அறிந்திருக்கின்றேன். இது போன்ற அதிகார துஷ்பிரயோகங்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இந்த விடியா அரசை வலியுறுத்துகின்றேன் என தெரிவித்தார்.