திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சீதாபுரம் கிராமத்தில் சிலம்பரசன்-பொன்மணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்துள்ளனர். இதில் மூத்த மகள் பிரதீபா கனகம்மாசத்திரம் அரசு நடுநிலைப் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று காலை பொன்மணி தனது மகள் பிரதீபா, பக்கத்து வீட்டு சிறுமி ஆகியோரை பள்ளிக்கு அழைத்து சென்றார். அவர்கள் சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை கடக்க முயற்சி செய்தனர்.

அப்போது திருத்தணி நோக்கி அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் பிரதீபா மீது மோதியது. இதனால் 20 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டு தாய் கண் முன்னே பிரதீபா துடிதுடித்து உயிரிழந்தார். இதனை பார்த்து பொன்மணி கதறி அழுத சம்பவம் அனைவரையும் கண்கலங்க செய்தது. இதுகுறித்த புகாரின் பேரில் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த மதன் என்பவர் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.