தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வேம்பார் கிராமத்தில் கடலோர பாதுகாப்பு காவல் நிலையம் முன்பு முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீன்பிடி தொழிலாளி இவருக்கு சாந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், அஸ்வின் குமார்(8) என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில்அஸ்வின்குமார் அரசு உதவி பெறும் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தான். நேற்று காலை கடலோர பாதுகாப்பு காவல் நிலையம் முன்பு அஸ்வின் குமார் தலைகுப்புற கிடந்தான்.

இதனை பார்த்த பொதுமக்கள் சிறுவனை தூக்கி பார்த்த போது கழுத்தில் கத்தி காயத்துடன் சிறுவன் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சிறுவர்கள் விளையாட்டில் இந்த சம்பவம் நடந்ததா? வேறு யாராவது முன்விரோதத்தால் சிறுவனை கொலை செய்தார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.