ஈரோடு மாவட்டத்தில் உள்ள கரட்டுபாளையத்தில் அப்பாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிம்ரான் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 வயதுடைய சையத் அத்னான் என்ற குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை பார்க்கும் சிம்ரான் தனது குழந்தையை வேலைக்கு செல்லும்போது உடன் அழைத்துச் செல்வது வழக்கம். கடந்த இரண்டாம் தேதி வழக்கம் போல சிம்ரான் தனது மகனை வேலைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு அருகே இருக்கும் தோட்டத்தில் குழந்தையை விட்டு விட்டு வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது சையத் தோட்டத்தில் காலியாக கடந்த பூச்சிக்கொல்லி மருந்து டப்பாவை எடுத்து அங்கிருந்த குழாயில் தண்ணீர் பிடித்து குடித்து விட்டான். இதனால் வயிற்று வலியால் துடித்த சையத்தை சிம்ரான் அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சையத் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சையத் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.