கடலூர் மாவட்டத்தில் உள்ள வரக்கால்பட்டு ஊராட்சியில் பாலமுருகன் என்பவர் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வந்துள்ளார். நிர்வாக காரணங்களுக்காக பாலமுருகன் புதுக்கோட்டைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். திடீரென அவர் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று அப்பகுதியை சேர்ந்த 400-க்கும் மேற்பட்டோர் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து பாலமுருகன் எங்கள் ஊருக்கு இலவச பட்டா உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை பெற்று கொடுத்துள்ளார். அவரை பணியிடமாற்றம் செய்யக்கூடாது.

அந்த உத்தரவை ரத்து செய்து எங்கள் ஊரில் தொடர்ந்து அவர் வேலை பார்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். அதனை கோட்டாட்சியர் ஏற்க மறுத்து விட்டதாக தெரிகிறது. அப்போது வரக்கால்பட்டு ஊராட்சி 9-வது வார்டு உறுப்பினரும், அ.தி.மு.க நிர்வாகியுமான ராஜா மண்ணெண்ணையை உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும் தீக்குளிக்க முயற்சி செய்ததாக அவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.