இந்தி பேசும் வட இந்தியர்கள் மீது தமிழகத்தில் தாக்குதல் நடத்துவது போன்று சமூகவலைதளங்களில் பகிரப்படும் கருத்துகள் தவறானவை ஆகும். ஆகவே சரியான ஆதாரங்கள் இன்றி இது போன்ற செய்திகளை பதிவிடுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் வட இந்தியர்கள் மீது தாக்குதல் என சமூகவலைத்தளங்களில் தவறான தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் வட இந்திய அரசியல் தலைவர்கள் பங்கேற்றதால் சிலருக்கு பொறாமை. இதனால் வட இந்திய தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடப்பதாக வதந்தி பரப்புகின்றனர். தமிழகத்தில் மட்டும் தான் வட இந்திய தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்று அவர் கூறினார்.