தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி தகவல்கள் பரவிய நிலையில் பீகார் மாநிலத்தின் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தார்கள். ஆனால் தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் யாரும் தாக்கப்படுவது கிடையாது அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று தமிழக காவல்துறை விளக்கம் கொடுத்திருந்தது. வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வந்த தகவல்களை அடுத்து முதல்வர் ஸ்டாலினுடன் அமைச்சர் சி.வி கணேசன் ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது தமிழ்நாட்டுக்கு வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் இது வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்றும், இதனை நம்மை விட வடமாநிலத்தில் இருந்து வருபவர்கள் தான் அதிக அளவில் சொல்வார்கள் என்றும் கூறியுள்ளார். மேலும் தாய் தமிழ்நாடு என்பது மனித குலத்துக்கு உதவி செய்யும் மகத்தான கருணைத் தொட்டிலாகவே எப்போதும் இருந்துள்ளது. இனியும் அப்படித்தான் இருக்கும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.