கடலூர் மாவட்டத்தில் உள்ள சிங்காரத்தோப்பில் சுபாஷ்(42) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 15 ஆண்டுகளாக சுபாஷ் சரக்கு கப்பலில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுபஸ்ரீ(41) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் பெரிய கப்பலில் செல்ல ஆசையாக இருப்பதாக சுபஸ்ரீ தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் சுபாஷால் அந்த ஆசையை நிறைவேற்ற இயலவில்லை. இதனால் வாழ்நாள் முழுவதும் கப்பலில் தங்கி இருப்பது போல உணர வேண்டும் என்பதற்காக தனது மனைவியின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு கப்பல் வடிவத்திலேயே சுபாஷ் வீடு கட்டினார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இதற்கான பணி தொடங்கியது. அதன்படி கப்பலை சுற்றி தண்ணீர் கிடப்பது போலவும், படிக்கட்டுகள், அறைகள் என அனைத்தும் கப்பலில் இருப்பது போலவே பிரம்மாண்ட தோற்றத்துடன் வீட்டை கட்டி முடித்தார். அந்த வீட்டில் நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம், கேப்டன் அமர்ந்து கப்பலை ஓட்டும் விதமாக ஒரு அறை போன்றவை அமைந்துள்ளது. இதனை ஏராளமான பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்து செல்கின்றனர்.