கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புல்லுவிளை பகுதியில் செல்வகீதா என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் 64 தவணை செலுத்தும் திட்டத்தில் இணைந்தார். இந்த திட்டத்தின் முடிவில் 94 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என கூறியுள்ளனர். இந்நிலையில் 64 தவணைகளும் முடிந்த பிறகு முதிர்வு தொகையான 94 ஆயிரம் ரூபாயை செல்வகீதா கேட்டுள்ளார். அப்போது நிறுவனத்தினர் பணத்திற்கான காசோலையை வழங்கியுள்ளனர். இதனையடுத்து தனியார் நிறுவனத்தின் வங்கி கணக்கு செயல்பாட்டில் இல்லாததால் காசோலை மூலம் செல்வகீதாவால் பணத்தை பெற இயலவில்லை.

இதனால் தனியார் நிதி நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனாலும் உரிய பதில் கிடைக்கவில்லை. இது தொடர்பாக செல்வகீதா குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் நிதி நிறுவனத்தின் சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி 10 ஆயிரம் ரூபாய் அபராதம், முதிர்வு தொகை 94 ஆயிரம் ரூபாய், வழக்கு செலவு தொகை 5 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 1 லட்சத்து 9 ஆயிரம் ரூபாயை 1 மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.