கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் மாதா காலனி பகுதியில் ஜான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எஸ்பரிதம்மா(55) என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் எஸ்பரிதம்மா கருங்கல் மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்குவதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து காய்கறிகளை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு திரும்பி வந்த எஸ்பரிதம்மா பையை திறந்து பார்த்துள்ளார். அப்போது 5 1/2 பவுன் வளையல்கள் வைத்திருந்த மணிபர்ஸ் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக கடைக்கு சென்று அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது காய்கறி வாங்கிக் கொண்டிருந்த போது முக கவசம் அணிந்தபடி நின்று கொண்டிருந்த ஒரு இளம்பெண் எஸ்பரிதம்மா பையில் இருந்த மணி பர்சை எடுக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இதுகுறித்து எஸ்பரிதம்மா கருங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நகையை அபேஸ் செய்த இளம்பெண் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.