சென்னை மாவட்டத்தில் உள்ள தியாகராய நகர் வடக்கு உஸ்மான் சாலையில் அரசு உதவி பெறும் பிரபல பள்ளி அமைந்துள்ளது. இங்கிருக்கும் விடுதியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். கடந்த 12-ஆம் தேதி பள்ளி திறக்கப்பட்டதால் விடுதியில் இருக்கும் மாணவர் தனது வீட்டில் இருந்து சத்துமாவு கொண்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்ததும் அந்த மாணவர் தனது நண்பர்கள் 5 பேருடன் சத்துமாவில் தேங்காய் எண்ணெயை ஊற்றி சாப்பிட்டுள்ளார். சிறிது நேரத்தில் ஆறு பேருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்தனர். உடனடியாக சிறுவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில், மாணவனின் பெற்றோர் மாணவனின் தலையில் பேன் அதிகமாக இருந்ததால் தேங்காய் எண்ணெய் டப்பாவில் பேன் எண்ணெய் ஊற்றி கொடுத்துள்ளனர். அதனை வெறும் தேங்காய் எண்ணெய் என நினைத்து தவறுதலாக சத்துமாவில் கலந்து சாப்பிட்டதால் தான் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் உடல்நிலை சீரானதும் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டனர். இது தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.