தெலங்கானா கம்மன் பகுதியில் வசித்து வந்தவர் மருத்துவர் ஹர்ஷவர்தன்(34). இவர் ஆஸ்திரேலியாவில் மருத்துவராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் இவரது உறவுக்கார பெண்ணுக்கும் சென்ற 2020-ம் வருடம் பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர். பிப்ரவரி 20ம் தேதி திருமணம் முடிந்த நிலையில், 9 நாட்களில் ஹர்ஷவர்தன் மீண்டும் வேலைக்காக ஆஸ்திரேலியா சென்று இருக்கிறார்.

இதனிடையே தன் மனைவியை அங்கு அழைத்துச்செல்ல தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் ஹர்ஷவர்தன் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது திடீரென்று ரத்த வாந்தி எடுத்து உள்ளார். மருத்துவரான இவர் உடனடியாக முழு உடல் பரிசோதனை செய்துள்ளார். அந்த பரிசோதனையில் தனக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பதை ஹர்ஷவர்தன் கண்டுபிடித்துள்ளார். அதன்பின் தன் மனைவி இளம் கைம்பெண் ஆகக் கூடாது என்பதற்காக அவரிடம் பேசி விவாகரத்து பெற்று உள்ளார்.

மேலும் மனைவிக்கு தேவையான பொருளாதார ஏற்பாடுகளையும் அவர் செய்து கொடுத்திருக்கிறார். இதற்கிடையில் அவர் ஆஸ்திரேலியாவில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அதே நேரம் தன் இறப்புக்கு பிறகு தேவையான வேலைகளையும் ஹர்ஷவர்தன் செய்து உள்ளார்.  அதன்படி ஆஸ்திரேலிய அதிகாரிடம் பேசி இறந்த பிறகு தன் உடலை விமானம் வாயிலாக சொந்த ஊருக்கு அனுப்ப தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளார். சென்ற மாதம் 23-ம் தேதி தன் நண்பர்களை தொடர்புகொண்ட ஹர்ஷவர்தன், இன்னும் சில மணி நேரங்களில் தான் இறக்க இருப்பதாக கூறி ஏற்கனவே செய்திருந்த ஏற்பாடுகள் படி நடக்க அறிவுறுத்தி உள்ளார்.

அதேபோன்று அன்றே அவர் நுரையீரல் புற்றுநோயால் உயிரிழந்தார். அதனை தொடர்ந்து ஹர்ஷவர்தன் உடல் சொந்த ஊருக்கு அவர் ஆர்டர் செய்து வாங்கி வைத்திருந்த சவப்பெட்டியில் எடுத்துச்செல்லப்பட்டது. இவ்வாறு தன் இறப்பை முன்கூட்டியே தெரிந்துக்கொண்டு, அதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது என திட்டமிட்டு அனைத்தையும் செய்த ஹர்ஷவர்தன் செயல் பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.