மகாராஷ்டிர மாநிலம் புனே நகரின் காத்ராஜ் பகுதியில், 17 வயது சிறுவன் ஒருவன் எதிரி கும்பலால் மிகக் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த இந்தச் சம்பவத்தில், முன்விரோதம் காரணமாக அந்தச் சிறுவனை மற்றொரு சிறுவர் கும்பல் அரிவாளால் 30-க்கும் மேற்பட்ட முறை தாக்கிப் படுகொலை செய்தது.

உயிரிழந்த சிறுவன் மற்றும் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தியவர்கள் என்றும், அவர்களுக்குள் ஏற்கனவே பலமுறை மோதல்கள் ஏற்பட்டு வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாகக் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, கொலையில் தொடர்புடைய நான்கு சிறுவர்களைப் பிடித்துக் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

கொலை வழக்கில் பிடிபட்ட சிறுவர்களைப் காவல் துறையினர் தங்களின் காவல் வாகனத்தின் போனட் மீது உட்கார வைத்து அழைத்துச் சென்றதாகக் கூறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் வைரலானது.

அந்த வீடியோவில், காவல் வாகனத்தின் முன் பகுதியில் அமரவைக்கப்பட்டிருந்த சிறுவர்களை, அங்கு வந்த பெண் ஒருவர் தனது காலணியால் சரமாரியாகத் தாக்கும் அதிர்ச்சி காட்சிகளும் பதிவாகியிருந்தன. சிறுவர் குற்றவாளிகளைச் சட்டம் தன் கையில் எடுப்பதற்கு முன்பாகவே, காவல் துறையினர் இதுபோன்று வாகனத்தின் போனட்டில் வைத்து அழைத்துச் சென்றதும், அவர்கள் பொதுவெளியில் தாக்குதலுக்கு உள்ளானதும் இணையத்தில் கடும் விவாதத்தைக் கிளப்பியது.

சிறார் குற்றவாளிகளைக் காவல் வாகனத்தின் போனட்டில் அமரவைத்து அழைத்துச் சென்ற சம்பவம் தொடர்பாகக் காவல் துறையினரின் நடவடிக்கை குறித்துப் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து, இச்சம்பவத்தில் தொடர்புடைய காவல் துறையினர் மீது விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகப் புனே மண்டலம் 2-ன் துணைப் காவல் ஆணையர் மிலிந்த் மோஹிதே தெரிவித்துள்ளார்.

சிறார் பாதுகாப்பு விதிகளை மீறி, குற்றஞ்சாட்டப்பட்ட சிறுவர்களை வாகன போனட்டில் ஏற்றி அழைத்துச் சென்றதில் தொடர்புடைய காவலர்கள் மீது விசாரணை முடிவில் தகுந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் துறை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது

“>