உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்கு, குறிப்பால் ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் இந்திய மாணவர்கள் சந்திக்கும் கடினமான நிஜ நிலவரத்தைக் குறித்து, ஐரோப்பாவில் வசிக்கும் ராகுல் மகாஜன் என்ற இந்தியர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

இந்தியாவில் வசதியான மற்றும் சௌகரியமான வாழ்க்கையை வாழும் மாணவர்கள், வெளிநாடுகளுக்குச் சென்ற பிறகு அங்கு சந்திக்கும் நிதி நெருக்கடிகள், பணிச் சுமைகள் மற்றும் மன அழுத்தம் போன்ற கசப்பான உண்மைகளை அவர் இதில் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்திய மாணவர்கள் பெருந்தொகையைச் செலவழித்து வெளிநாடுகளுக்குப் படிக்கச் செல்கின்றனர். ஆனால், அங்கு சென்ற பிறகு தங்களின் அன்றாட வாழ்க்கைச் செலவுகளைச் சமாளிக்கக் கடினமான பகுதிநேர வேலைகளை செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றனர்.

இந்தியாவில் ஒருபோதும் செய்யத் தயங்கும் சாதாரண மற்றும் கடுமையான வேலைகளைக் கூட அவர்கள் நாள் முழுவதும் செய்ய வேண்டியிருக்கிறது. மேலும், சர்வதேச மாணவர்களுக்கு வாரத்திற்கு குறிப்பிட்ட மணிநேரம் மட்டுமே வேலை செய்ய அனுமதி இருப்பதால், அந்த வருமானத்தைக் கொண்டு உணவு, தங்குமிடம் மற்றும் பராமரிப்புச் செலவுகளைச் சமாளிப்பது மிகவும் சவாலாக அமைகிறது.

இதோடு மட்டுமல்லாமல், பெரும்பாலான மாணவர்கள் பெரிய அளவில் கல்விக்கடன் பெற்றே வெளிநாடு செல்வதால், அக்கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய பெரும் அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். தாயகத்தில் உள்ள உறவினர்கள் மற்றும் சமூகத்தினரின் ‘என்.ஆர்.ஐ அந்தஸ்து’ குறித்த எதிர்பார்ப்புகள், படிப்பை வெற்றிகரமாக முடிக்கும் கட்டாயம் மற்றும் குடியுரிமை பெறுவதற்கான நீண்ட நடைமுறைகள் என அனைத்துப் பக்கங்களிலிருந்தும் மாணவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள் என்று அவர் அதில் விளக்கியுள்ளார்.

“>