அமெரிக்காவில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர், வெளிநாட்டு வாழ்க்கையின் நிதர்சன நிலை குறித்துப் பகிர்ந்த காணொலி ஒன்று இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

“அமெரிக்காவில் உங்களுக்கு இளவரசி போன்ற உபசரிப்பு கிடைக்காது” என்ற கருப்பொருளுடன் அவர் வெளியிட்ட பதிவில், இந்தியாவில் கிடைப்பது போன்ற சொகுசான வாழ்க்கையோ அல்லது பிறரின் உதவியோ இங்கு எளிதில் கிடைக்காது எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளிநாட்டிற்குச் செல்லத் திட்டமிடும் நபர்களுக்கு உண்மையான சூழலை உணர்த்தும் வகையில் அமைந்த இந்தப் பதிவு, சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. அந்தப் பெண் தனது பதிவில், அமெரிக்காவில் அன்றாட வாழ்க்கையைக் கொண்டு செலுத்துவதில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்களையும், அங்குள்ள செலவுகளையும் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, அடிப்படைத் தேவையான குடிநீருக்குக்கூட அடிக்கடி பாட்டில் தண்ணீரை விலைக்கு வாங்க வேண்டிய சூழல் இருப்பதாகக் கூறி, அது கூடுதல் செலவை ஏற்படுத்துவதாக ஆதங்கப்பட்டார். மேலும், இந்தியாவில் கிடைப்பதைப் போல வீட்டு வேலைகளுக்கு ஆள்கள் கிடைக்க மாட்டார்கள் என்றும், அனைத்து வேலைகளையும் தானே செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்தப் பதிவு இணையவாசிகளிடையே இருவேறு கருத்துக்களை உருவாக்கி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சிலர் வெளிநாட்டில் குடியேறும்போது ஏற்படும் சவால்களை அவர் வெளிப்படையாகப் பேசியிருப்பதாக ஆதரித்தாலும், பெரும்பாலான பயனர்கள் அவரது கருத்துகளை மறுத்துள்ளனர்.

முக்கியமாக, அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் குழாய் நீரே குடிக்க மிகவும் பாதுகாப்பானது என்றும், பாட்டில் தண்ணீரை அதிக பணம் கொடுத்து வாங்க வேண்டிய அவசியமில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும், சுத்திகரிக்கப்பட்ட நீர் தேவைப்பட்டால், குறைந்த செலவில் நீர் சுத்திகரிப்புக் கருவிகளை வீட்டிலேயே எளிதாகப் பொருத்திக் கொள்ள முடியும் எனக் கூறி, பலரும் அவருக்குப் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

“>