குஜராத்தின் ஜூனாகாத் பகுதியில் உள்ள செங்குத்தான மலைப் பாதை வழியாக, நான்கு நபர்கள் ஒரு பக்தரை பல்லக்கில் சுமந்து கொண்டு மலை உச்சிக்குச் செல்லும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

செங்குத்தான படிகளில் பக்தரையும் பல்லக்கையும் சமநிலைப்படுத்தி சுமந்து செல்லும் தொழிலாளர்களின் கடுமையான உடலுழைப்பைக் காட்டும் இந்தக் காட்சி, ஆன்மிக நம்பிக்கை என்பதைத் தாண்டி மனித கண்ணியம் மற்றும் பாரம்பரிய முறைகள் குறித்த கேள்விகளை இணையவாசிகளிடையே எழுப்பியுள்ளது.

இந்தக் காணொளியைப் பகிர்ந்த பலர், “ஒரு மனிதனை மற்றொரு மனிதன் சுமப்பது நவீன சமூகத்தின் மனித சமத்துவத்திற்கும் கண்ணியத்திற்கும் எதிரானது” என்று தங்களது அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர். “கடவுள் இதைப் பார்த்து எப்படி உணர்வார்?” என்றும், “நான்கு பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக இதை நியாயப்படுத்த முடியாது” என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மேலும், கேபிள் கார் மற்றும் பிற நவீனப் போக்குவரத்து வசதிகள் கிடைக்கும் இடங்களில் கூட இத்தகைய பழமையான முறைகள் தொடர்வது எந்த வகையில் நியாயம் என்றும் சிலர் கேள்வி எழுப்புகின்றனர். இருப்பினும், மற்றொரு தரப்பினர் இக்கருத்துக்களுக்கு மாறுபட்ட பார்வையை முன்வைத்து இச்சேவையை ஆதரிக்கின்றனர்.

வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கடுமையான உடல்நலக் குறைபாடு உள்ள பக்தர்கள் மலைக் கோயில்களுக்குச் சென்று வர இச்சேவை மிகவும் அவசியமானது என்றும், இதனைச் செய்யும் தொழிலாளர்களுக்கு இதுவே முதன்மையான வாழ்வாதாரமாக விளங்குகிறது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்நிலையில் இதன் மூலம், இச்சம்பவம் ஆன்மிகப் பக்தியா, மனித உழைப்புச் சுரண்டலா அல்லது பொருளாதார வாழ்வாதாரத் தேவையா என்ற இருவேறு முரண்பட்ட கருத்துக்களுடன் இணையத்தில் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

“>