திருவாரூரில் வருகிற 27-ஆம் தேதி வருங்கால வைப்பு நிதி தொடர்பான குறைதீர்ப்பு முகாம் நடைபெறுகிறது. இது குறித்து திருச்சி மண்டல இ.பி.எஃப்.ஓ முதன்மை ஆணையர் முருகவேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, ஒவ்வொரு மாதமும் மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பாக மாவட்டம் தோறும் குறைதீர்க்கும் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெறுகிறது. அந்த வகையில் திருவாரூர் விஜயபுரத்தில் வர்த்தக சபை திருமண மண்டபத்தில் வருகிற 27-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நடைபெறுகிறது.

இந்த முகாமில் இ.பி.எஃப்.ஓ தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கங்கள் அளிக்கப்படுகிறது. மேலும் இ.பி.எஃப்.ஓ செட்டில்மெண்ட் கணக்குகளை இணைப்பது, யூ.என்.ஏ கணக்கினை பயன்படுத்தும் முறை, வெவ்வேறு பிஎஃப் கணக்குகளை இணைப்பது, வங்கி கணக்கு, ஆதார் உள்ளிட்ட தங்களுடைய சுயவிவரங்களை இணைத்தல் போன்ற சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது. அதேப்போல் ஓய்வூதியர்கள் முகாம் நடைபெறும் இடத்திலேயே மின்னணு உயிர்வாழ் சான்றிதழ் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெயர் மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாக முகாமில் கூறலாம். அதனால் முகவர்கள், சந்தாதாரர்கள், தொழில் நிறுவனங்களின் முதலாளிகள், அவர்களின் முகவர்கள் போன்றோர் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.